4 ஆண்டுகளில்; 168 குழந்தைத் தொழிலாளர்கள் - கடத்தப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வாளிக்கும் சென்னை தொண்டு நிறுவனம்!
சென்னையை சேர்ந்த, ஐசிடபிள்யூஓ-ன் கீழ் இயங்கும் மனிதக் கடத்தல் தடுப்பு கிளப்பானது, தமிழ்நாடு குழந்தைத் தொழிலாளர் பணிக்குழுவுடன் இணைந்து, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் 168 குழந்தைகளை மீட்டெடுத்துள்ளது.
"கடந்த ஆண்டு, சென்னையில் உள்ள பேக் தொழிற்சாலையில் இருந்து 13 வயது சிறுவனை மீட்டெடுத்தோம். கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 10-15 மணி நேரம் மாதம் 3,000 ரூபாய் சம்பளத்திற்காக வேலை செய்து வந்தான். ஆனால், அவனை அங்கிருந்து மீட்டெடுத்தவுடன், அவன் கவலை தான் கொண்டான். என்னவென்றால் அவன் வேலைக்கு செல்லாவிட்டால், வீட்டில் இருக்கும் அவரது பாட்டியும் தம்பியும் எப்படி சாப்பிடுவார்கள் என்ற கவலை அது..."
இந்திய சமூக நல அமைப்பின் (ICWA) கீழ் செயல்படும் மனித கடத்தல் தடுப்பு கிளப்பின் (ஏஹெச்டீசி) குழந்தை ஆலோசகர் மெர்சி யுவர் ஸ்டோரிடயிடம் கூறியது அது.
2020ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பட்ட, ஐசிடபிள்யூஓ-ன் மனிதக் கடத்தல் தடுப்பு கிளப்பானது, தமிழ்நாடு குழந்தைத் தொழிலாளர் பணிக்குழுவுடன் இணைந்து, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் 168 குழந்தைகளை மீட்டெடுத்துள்ளது. அவர்களில் பெரும்பாலவனர்கள் சிறுவர்களாகும். பணிக்கு சென்ற இடத்தில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகிய 5 சிறுமிகளையும் மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.
"இதுவரை மீட்கப்பட்ட குழந்தைகளில் பலருக்கும், குழந்தைத் தொழிலாளர் என்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதே தெரியாது. குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு, காவல்துறை தலையிடும்போதுதான், ஏதோ தவறாக இருப்பதாகவே அக்குழந்தைகள் உணர்கிறார்கள்.
பல சமயங்களில், இந்த பயமே விசாரணைகளின் போது அவர்கள் பேசுவதைத் தடுத்துவிடுகிறது. அவர்களுக்கு உதவ தான் நாங்கள் இங்கே வந்துள்ளோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்கே சில நேரமாகிறது, என்று கூறினார் மெர்சி.
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் உள்ள 38 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஐசிடபிள்யூஓ இணைந்து உள்ளூர் நபர்களின் உதவியுடன் ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி, மாநிலத்தின் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து கடத்தப்படும் குழந்தைகளை மீட்கிறது. அவர்கள் மீட்டெடுக்கும் குழந்தைகளில் சுமார் 80% பேர் ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். வீடுகளை விட்டு வெளியே வரும் குழந்தைகள் ரயில் நிலையங்களில் உள்ள ஏஜென்ட்களால் அழைத்துச் செல்லப்படுகிறார்கள், அல்லது அவர்களுடைய குடும்பத்தினரே பணநெருக்கடியால் குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த மூன்று தசாப்தங்களாக, ஐசிடபிள்யூஓ ஆனது இந்தியா முழுவதும் ஒதுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவாக அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் குழந்தைகள் கடத்தப்படுவதற்கு வேலையில்லா திண்டாட்டமும், வறுமையும் முக்கியக் காரணங்களாக உள்ளன. குழந்தை கடத்தல் வலைப்பின்னல் பரந்த, சிக்கலான மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. குடிகார தந்தைகள், விதவை தாய்மார்கள் மற்றும் வேலையில்லாத அல்லது திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொண்ட பெற்றோர் ஆகியோரை இலக்காகக் கொண்ட சிறிய ஏஜெண்ட்கள், அக்குடும்பங்களை கண்காணிக்கின்றனர்.
”குழந்தையை வேறொரு நகரத்திற்கு வேலைக்கு அனுப்பினால், பணம் கிடைப்பதுடன் அவர்களது வாழ்க்கைத் தரம் உயரும் என உறுதியளித்து, குடும்பத்தின் நிலையை அவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள். கடைசியில், மொழி தெரியாத ஊரில், முகமறிய மனிதர்களுக்கு மத்தியில் திக்கு தெரியாமல் நிற்கிறோம் என்பதை அக்குழந்தைகள் உணரும் சமயத்தில் தப்பிக்க வழியற்று போகிறது," என்கிறார் ஐசிடபூள்யூ-வின் நிறுவனரும், செயலாளருமான ஏ.ஜே. ஹரிஹரன்.
ஒவ்வொரு குழந்தை மீட்பிலும், ஒவ்வொரு கதை...
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் மட்டும் 2,877 குழந்தைகள் உட்பட 6,533 பேர் கடத்தப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு நாளைக்கு எட்டு பேர் கடத்தப்பட்டுள்ளனர். கல்வி இல்லாமை, குழந்தைத் திருமணம், கலாச்சார மற்றும் பாரம்பரியத் தாக்கங்கள், ஊழல் மற்றும் அமலாக்கமின்மை, குழந்தைத் தொழிலாளர்களின் தேவை மற்றும் சுரண்டல், அரசியல் ஸ்திரமின்மை, பாலினப் பாகுபாடு, மற்றும் போதிய சமூக பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாமை ஆகிய 8 முக்கிய காரணங்களாலே நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாக "குழந்தை உரிமைகள் மற்றும் நீங்கள்" (CRY) எனும் என்ஜிஓ கூறுகிறது.
மோசமான நிதி நிலைமையில் வாடும் குடும்பங்களை இலக்காகக் கொண்ட கடத்தல்காரர்கள் அவர்களது குழந்தைகளை வாங்கிக் கொள்வதாக கூறி அடிக்கடி அவர்களை அணுகுகின்றனர். இதனாலும், இடைவிடாத வறுமையிலாலும் தவித்துவரும் குடும்பங்கள் வேறு வழியின்றி, கடத்தல்காரர்களிடம் குழந்தைகளை கொடுத்துவிடுகின்றனர்.
"சில சமயங்களில், நீண்ட காலமாக கடன் சுமையில் தவித்து வரும் குடும்பங்கள், அவர்களது பெண் குழந்தைகளை அதிக கூலி தரும் வேறு நகரங்களுக்கு வீட்டு வேலைக்காக அனுப்புகின்றனர். பிள்ளைகளை வேலைக்கு சேர்க்கும் போதே பெற்றோர்களுக்கு ரூ.10,000 அல்லது ரூ.20,000 ஆரம்ப முன்பணமாக கொடுக்கப்பட்டு, வரும் மாதங்களில் இன்னும் கூடுதலாக வழங்கப்படும் என்ற நம்ப வைக்கப்படுகின்றனர். ஆனால், பெண் குழந்தைகளோ எங்கோ ஒரு மத்திய கிழக்கு நாட்டில் 30-40 பேர் கொண்ட ஒரு பெரிய வீட்டில், வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அவர்கள் அங்கு சிக்கி, பாலியல் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள்.”
வேறு சில சமயங்களில், 9 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்கள், அவர்களது தங்கைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிடைக்கா ஏதோவொரு ஊரில் உள்ள நகைக்கடைகள் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு அனுப்பப்படுகிறார்கள். கடைசியில், அவர்கள் 500-800 சதுர அடி கொண்ட அறையில் 13 முதல் 15 குழந்தைகள் சேர்ந்து தங்க வைக்கப்படுகிறார்கள்" என்றார் ஹரிஹரன்.
ஐசிடபிள்யூ மீட்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்விற்காக ஆதரவளித்து, அவர்கள் மீண்டும் சுரண்டலுக்கு ஆளாகாமல் இருக்க உயர்கல்விக்கான நிதி உதவியை அளிக்கிறது.
ஆட்கடத்தலுக்கு எதிராக உருவாகும் இளைஞர் படை!
மனித கடத்தலுக்கு எதிரான கிளப்பின் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று இளைஞர்களின் ஈடுப்பாட்டை அதிகரிப்பது. கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தின் 34 மாவட்டங்களில் உள்ள 109 கல்லூரிகளைச் சேர்ந்த ஒரு லட்சம் மாணவர்களுக்கு ஐசிடபிள்யூ பயிற்சி அளித்துள்ளது. இப்பயிற்சி திட்டத்தில் நாடக வடிவில் கிராமங்களில் குழந்தை கடத்தல் குறித்த விழிப்புணர்வை எவ்வாறு ஏற்படுத்துவது எனவும், தகவல்களை எப்படி பரப்புவது என்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
"குழந்தை கடத்தலுக்கான காரணங்கள் அதன் ஆபத்துகள் மற்றும் அண்டையாரிடம் கவனிக்க வேண்டிய அறிக்குறிகள் என கடத்தல் பற்றிய ஒரு தெரு நாடக ஸ்கிரிப்ட்டை தயாரித்து வைத்துள்ளோம். சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு சென்று, நாடகத்தில் ஆர்வமுள்ள மாணவர்களுக்குப் அந்நாடகத்தை பயிற்சி அளித்துள்ளோம். கடத்தல் பற்றிய புகார்களை மக்கள் அளிக்க உதவும் வகையில் நாடகத்தின் முடிவில், 1098 (சைல்டு லைன்), 181 (தமிழக மகளிர் ஹெல்ப்லைன்) மற்றும் எங்களின் சொந்த கடத்தல் தடுப்பு ஹெல்ப்லைன்- 9087161161 ஆகிய அனைத்து ஹெல்ப்லைன் எண்களையும் தெரிவுப்படுத்துவர்," என்றார் ஐசிடபிள்யூஓ-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரவீணா சாலமன்.
தமிழ்நாடு முழுவதும் 34 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இந்நாடக ஸ்கிரிப்டைப் பகிர்ந்துள்ளது ஐசிடபிள்யூஓ. இதன் மூலம் கல்லுாரியின் பேராசிரியர் குழு மாணவர்களுக்கு கடத்தல் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து வழிகாட்டுகிறது.
"கடத்தல் வழக்குகளில் பணிபுரியும் போது, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே அடிக்கடி முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இது நம்பிக்கை மற்றும் பரிச்சயமின்மையால் ஏற்படுகிறது. இந்த இடைவெளியை குறைக்க ஐசிடபிள்யூஓ முயற்சித்து வருகிறது. கடத்தப்பட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு மீட்பது ஒரு கூட்டு வேலை. காவல்துறை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் பணிபுரியும் போது, விசாரணைக்கு உதவும் ஆலோசகர்களை நாங்களும், காவல்துறையினர் வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கும் நீதியை உறுதி செய்வதற்கும் எங்கள் ஆதரவைப் பெறுகிறார்கள்," ஆட்கடத்தலுக்கு எதிரான பணிக்குழுவை உருவாக்குவதற்காக காவல் துறை மற்றும் தேசிய அளவிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்த அதிகாரியான நாயர்.
‘அக்காவை போல் வீட்டைவிட்டு ஓடிடுவேன் என என் படிப்பை நிறுத்திய பெற்றோர்’ - தடைகளை தகர்த்த மாணவியின் கதை!