இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்திக்கும் எலான் மஸ்க்- முதலீட்டுத் திட்டங்களை அறிவிப்பாரா?
டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் பிரதமர் நரேந்திர மோடியை ஏப்ரல் 22-ம் தேதி வாக்கில் புது டெல்லியில் சந்திக்கிறார். பிறகு தனது இந்திய முதலீட்டுத் திட்டங்களைப் பற்றி தனியாக அறிவிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் பிரதமர் நரேந்திர மோடியை ஏப்ரல் 22-ம் தேதி வாக்கில் புது டெல்லியில் சந்திக்கிறார். பிறகு தனது இந்திய முதலீட்டுத் திட்டங்களைப் பற்றி தனியாக அறிவிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு புதிய ஃபாக்டரிகளைத் திறப்பதற்கான அறிவிப்பையும் எலான் மஸ்க் வெளியிடுவார் என்று தி இந்து பிசினஸ் லைன் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. எலான் மஸ்க்குடன் பிற செயல் அதிகாரிகளும் வருகின்றனர்.
முதன் முதலில் இந்தச் செய்தியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டது. ஆனால், இது குறித்து பிரதமர் அலுவலகமோ டெஸ்லாவோ இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை, என்பதால் சந்திப்பு நிகழும் என்றாலும் எலான் மஸ்க்கின் இந்திய பயணத்திட்டம் மாற்றமடையவும் வாய்ப்புள்ளது.
எலான் மஸ்க்கும் மோடியும் கடைசியாக ஜூன் மாதம் நியூயார்க்கில் சந்தித்தனர். டெஸ்லா மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க இந்தியாவை பல மாதங்களாக வலியுறுத்தியது.
உற்பத்தியாளர் குறைந்தபட்சம் $500 மில்லியன் முதலீடு செய்து ஒரு தொழிற்சாலையையும் நிறுவும் பட்சத்தில் சில மாடல்களின் மீதான இறக்குமதி வரியை 100 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கும் புதிய மின்சார வாகனக் கொள்கையை இந்திய அரசு கடந்த மாதம் வெளியிட்டது.
சுமார் $2 பில்லியன் முதலீடு தேவைப்படும் ஒரு உற்பத்தி ஆலைக்கான தளங்களைப் பார்ப்பதற்காக டெஸ்லா அதிகாரிகள் இந்த மாதம் இந்தியாவிற்கு வருவார்கள் என்று ராய்ட்டர்ஸ் ஏற்கெனவே ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் டெஸ்லா இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக அதன் ஜெர்மன் ஆலையில் வலது பக்க டிரைவ் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரம் X தளத்தில் எலான் மஸ்க் பதிவிட்டபோது,
"எல்லா நாடுகளிலும் மின்சார கார்கள் இருப்பதைப் போல இந்தியாவிலும் மின்சார கார்கள் இருக்க வேண்டும். இந்தியாவில் டெஸ்லா மின்சார வாகனங்களை வழங்குவது இயற்கையான முன்னேற்றம்," என்று கூறினார்.
மின்சார வாகனங்களை இந்தியாவில் நுழைப்பதன் வணிகத் தத்துவம் என்னவெனில் அமெரிக்காவிலும் சீன சந்தைகளிலும் மின் வாகனங்களுக்கு தேவைகள் குறைந்து வருவதே.
2023-ம் ஆண்டில் மொத்த கார் விற்பனையில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் பங்களிப்பு வெறும் 2% தான். ஆனால், 2030-ல் 30% ஆக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தகவல் உதவி - தி இந்து பிசினஸ்லைன்