இந்தியாவில் ஆழ்நுட்ப காப்புரிமை பதிவுகளில் தேசிய அளவில் தமிழகம் முன்னிலை - நாஸ்காம் தகவல்!
இந்தியாவில் இருந்து 2023 நிதியாண்டில் 83 ஆயிரம் காப்புரிமை பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆண்டு அடிப்படையில் இது 24 சதவீத வளர்ச்சி என்றும் நாஸ்காம் அறிக்கை தெரிவிக்கிறது.
அறிவுசார் சொத்துரிமை பதிவுகள், குறிப்பாக காப்புரிமைகள் இந்திய பொருளாதாரத்தில் புதுமையாக்கத்தை ஊக்குவிப்பதாகவும், ஆழ்நுட்பத் துறையில் காப்புரிமைகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
மென்பொருள் நிறுவனங்கள் அமைப்பான நாஸ்காம் தனது ஏழாவது, இந்தியாவில் காப்புரிமைகள் போக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை,
23 நிதியாண்டில் 83,000 காப்புரிமைகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டு அடிப்படையில் இது மிகவும் அதிகபட்ச ( 26.6 %) வளர்ச்சியாக அமைவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், இந்த காலத்தில், பெண்கள் பதிவு செய்த காப்புரிமைகள் எண்ணிக்கை 11.6 சதவீதம் அதிகரித்துள்ளது. பதிவான காப்புரிமைகளில் 9.3 சதவீதத்துடன் தமிழ்நாடு, மகாராஷ்ட்ராவை (6.8%) பின்னுக்குத்தள்ளி முன்னிலை பெற்றுள்ளது.
காப்புரிமை பதிவில் தமிழ்நாடு முன்னிலை வகிக்க, ஸ்டார்ட் அப் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமை பதிவுக்கு மாநில அரசு மானியம் அளிப்பது, ஊக்க மையங்கள், வலுவான ஆய்வு சூழல் உள்ளிட்ட அம்சங்கள் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கான ஆய்வு, உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு மற்றும் இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் அறிக்கைகள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காப்புரிமைகள் வழங்கப்படும் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2019ல் இருந்து 2023 காலத்தில் இது 2X மடங்கு அதிகரித்துள்ளது.
2023 மார்ச் முதல் 2024 மார்ச் வரையான காலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த போக்கு தொடரும் என நாஸ்காம் எதிர்பார்க்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் உள்ளவர்கள் காப்புரிமை பதிவு செய்வது இரு மடங்காகியுள்ளது. 2019ல் 33.6 சதவீதத்தில் இருந்து 2023ல் இது 50 சதவீதமாகியுள்ளது.
"இந்த எண்ணிக்கை உயர்வு நாட்டில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான விழிப்புணர்வும், கவனமும் அதிகரித்திருப்பதை உணர்த்துகிறது. கல்வி நிறுவனங்கள் இந்த வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன,” என நாஸ்காம் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் தொழில்நுட்பத் துறையில் புதுமையாக்க போக்கு அதிகரித்து வருவதாகவும், 2008 முதல் இந்திய ஆழ் தொழில்நுட்ப நிறுவனங்கள் 922 காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், இந்தியாவில் புதுமையாக்கம் செழிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008 முதல் முன்னணி இந்திய ஆழ் தொழில்நுட்ப நிறுவனங்கள் 900க்கும் அதிக காப்புரிமைக்கு பதிவு செய்துள்ளது மற்றும் மற்ற நாடுகளில் இந்தியாவில் காப்புரிமை கூட்டுறவு ஒப்பந்த கோரிக்கைகளை 32,000 அளவு சமர்பித்துள்ளது, இந்த பிரிவில் அதிகம் கவனம் செலுத்தப்படுவதை உணர்த்துவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஆழ்நுட்ப காப்புரிமை பதிவுகளில் சென்னை காப்புரிமை அலுவலகம் 70 சதவீத எண்ணிக்கை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூரு நிறுவனங்கள் 30 சதவீதம் வரை உள்ளன. இவற்றில் பெரும்பாலும் ஏஐ மற்றும் சுகாதாரத்துறையில் அமைந்துள்ளன.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் ஆழ்நுட்ப காப்புரிமை பதிவுகளில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் வருகின்றனர். எனினும், சர்வதேச காப்புரிமை பதிவுகளில் இந்தியாவின் பங்கு 2 சதவீதமாக மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கடந்த சில ஆண்டுகளில் காப்புரிமை பதிவுகள் அதிகரித்திருப்பது இந்தியாவின் புதுமையாக்க ஆற்றல் வளர்ச்சி பெறுவதன் அடையாளமாக அமைகிறது. குறிப்பாக ஏஐ போன்ற துறைகளில் இதை காணலாம். உள்நாட்டு உற்பத்தி செயல்திறனை அதிகரிக்க காப்புரிமை தொடர்பான விழிப்புணர்வு அதிகரிப்பதோடு, கூட்டு முயற்சியும் தேவை," என நாஸ்காம் தலைவர் தேபன்ஜி கோஷ் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan