'பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது' - மத்திய இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் பெருமிதம்!
2024ம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 10 ஆண்டுகளில் சவால்களைக் கடந்து நாடு அபரிமித வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், 2024ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்பதால் இந்த அரசின் இடைக்கால பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு துறை வல்லுநர்களுடன் கருத்துகள் கேட்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பிருந்தே மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகளை நிதியமைச்சகம் தொடங்கியது.
காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிவிப்புகள் அடங்கிய ’சிவப்பு நிற துணி போர்த்தப்பட்ட டேப்லட்’டை தன்னுடைய மத்திய நிதியமைச்ச அதிகாரிகளுடன் சேர்ந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொரார்ஜி தேசாயைப் போல ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
பட்ஜெட் உரையை சரியாக 11 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யத் தொடங்கினார். அவருடைய உரையின் விவரங்கள்:
“கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்து பொருளாதார ரீதியாக மக்களை தலைநிமிரச் செய்துள்ளது. 2014ல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போது பல்வேறு சவால்கள் இருந்தன. பிரதமரின் சீரிய முயற்சியால் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. ஏழை மக்கள் அதன் பலன்களைப் பெற்றுள்ளனர். சமூக, புவியியல் அடிப்படையில் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாடு புதிய நம்பிக்கையை பெற்றுள்ளது. பாஜகவிற்கு மக்கள் மீண்டூம் வாக்களிப்பார்கள். 2047ல் புதிய இந்தியா உருவாகும்,” என்றார்.
சமூக நீதியில் அக்கறை
சமூக நீதி என்பதே பாஜக அரசின் இலக்காக உள்ளது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு, அனைவருக்கும் எரிவாயு என்கிற நிலையை அடைந்துள்ளோம். 25 கோடி மக்கள் பத்து ஆணடுகளில் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இல்லம்தோறும் குடிநீர், அனைவருக்கும் கூடு, குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வளர்ச்சிக்கான காலம்
34 லட்சம் கோடி ரூபாய் ஏழை மக்களுக்கு உதவித்தொகையாக ஜன்தன் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். விலைவாசி கட்டுக்குள் வந்துள்ளது.
பெண்கள் தொழில்முனைவோராவது 10 ஆண்டுகளில் 28% உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில் 7 ஐஐடிகள், 19 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 390 பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. முத்ரா திட்டத்தில் பெண்களுக்கு 30 கோடி ரூபாய் முறை கடன்களாக வழங்கப்பட்டுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு, முத்தலாக் போன்ற சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. இந்திய வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு வானமே எல்லை. நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்த சமயத்தில் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். கொரானா பரவலுக்குப் பிறகு உலக நாடுகளின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் வளர்ச்சிக்கான காலமாக இருக்கும்.
பொருளாதார சீர்திருத்த ஆலோசனை
ஒரு கோடி கூடுகளுக்கு சோலார் மின்வசதி ஏற்படுத்தித் தரப்படும். சோலார் மின் உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு முதல் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி மாநில அரசுகளுடனும், அடுத்த தலைமுறையினருடனும் கலந்து ஆலோசிக்கப்படும். கிராமப்புறங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும்.
மகப்பேறு திட்டங்கள், குழந்தைகள் நலத்திட்டங்கள் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும். 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு கர்பப்பை புற்றுநோய் தடுப்புக்கான தடுப்பூசி போடப்படும். புதிதாக மருத்துவ கல்லூரிகள் ஏற்படுத்தப்படும், ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளிலும் மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.